May 9, 2016

விலைப்பெண்ணின் உலகம்...

கூசும் கதிரொளியை பொருட்படுத்தாமல் கண்களை கசக்கியபடி மேலிருந்தவனை தள்ளிவிட்டு எழுந்திருக்கிறாள் அவள். போதையின் மணம் நிரம்பிய அறையின் மறைவுகளை வெளிச்சம்போட்டு வழியே
வெளியேற்றின அவள் திறந்த சாளரங்கள். 'சிறுக்கி மூஞ்சில் முழித்தாலே பாவம்' காதில் விழும் ஊராரின் ஏக வசவுகளை மேலாடையின் கொக்கிகளுடனே அணிந்துக்கொள்கிறாள், உடலெங்கும் உமிழப்பட்டு கறையாக்கப்பட்ட அவன் காமத்தின் மிச்சங்களை ஒற்றை சோம்பல் முறிப்பில் தூர எறிந்தபடி. காற்றின் வழி வரும் எல்லா வசவுகளையும் புன்னகையுடன் காதில் வாங்கிக்கொண்டும், கசக்கி எறியப்பட்ட சேலையை தேடிக்கொண்டும், பரிதாப மாந்தர்களின் ஏச்சுகளும் பேச்சுகளும் மனதில் ஒட்டாதபடி ஒற்றை பெருமூச்சுடன் மனதை உதறிக்கொள்கிறாள். அள்ளியெடுத்த சேலையை கட்டும்போதுதான் முதன்முறையாக முழுதாக புலப்படுகிறது முந்தைய இரவில் தன்னை புரட்டியெடுத்தவனின் முகம். யார் இவன்? காமப்பிசாசாகவோ திருடனாகவோ கட்சிக்காரனாகவோ பணம் கொண்டவனாகவோ ஊதாரி தகப்பனாகவோ மனைவியை காதலிக்கும் பொதுவான கணவனாகவோ இருக்கலாம். உடல் வளையாமல் வட்டிக்காசு கேட்டு வீட்டுக்கதவை தட்டுபவன், கணக்கு வைத்திருக்கும் 
வேளைக்கு உணவு தரும் உணவகம், உடல் விற்று கிடைப்பதில் 
உடல் கூசாமல் பங்கு கேட்கும் அங்காடி போக்கிரி, வாடகையெல்லாம் வேணாம் என்று 
மாதம் பிறந்தால் வாய்ப்புக்காக காத்திருக்கும் 
வீட்டுரிமையாளன், மிரட்டி கடன் வாங்கி குடிக்கும் குடிகாரன், ஏமாற்றி வயிறு வளர்க்கும் கேடுகெட்டவன், வாக்குக்காக எப்போதாவது வாசல் தேடி வரும்
அரசியல்வாதி என எல்லார் நினைவும் வந்துத் தொலைக்கிறது,
காமத்தை தரவிறக்கியவன் கொடுத்த அச்சடிக்கப்பட்ட அரச காகிதங்களை பொறுக்கியெடுக்கும்போது. அறையின் தாழ் திறந்த கணத்தில் ஒரு கணம் கண் மூடித் திறந்தது உலகம் 'இவளையெல்லாம் ஊரை விட்டு தொரத்தி விடணும்' முன்னெப்பதோ வந்துவிட்டுப் போனவன் சொன்னதை புன்சிரிப்புடன் கடந்து செல்கிறாள், ஊரை நினைத்தபடி. அப்பாவிப்பெண்ணுடனோ வளர் நங்கையோ... எங்கோ எப்படியோ இறக்கப்பட வேண்டியவை இவளோடு முடிந்துவிட்டதென மகிழ்ந்துக்கொள்கிறாள். முந்தைய இரவுகளின் நிகழ்வுகளை ஏதுமறியாதது போல பதிவு செய்தபடி ஓடிக்கொண்டிருந்தது மணிக்காட்டி. ~ பிசாசுக்குட்டி இரா.ச.எழிலன்

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.