மஞ்சள் , சந்தனம் ...
ஒண்ணுமில்லீங்க நல்ல விடயம் சொல்ல போறேன் .
அதான் மங்களகரமா ஆரம்பிக்கலாம்னு ..........
' தானே ' விலிருந்து தப்பி வந்த ஒரு சீவன் பேசுகிறேன் ...
இருபத்து ஒன்பதாம் தேதி காலை எழும்பினோம் .
பல்லைக் காட்டி இளித்துக்கொண்டிருந்தது மார்கழி மாத சூரியன் .
' மச்சான் கணக்கில் பணம் போட்டாச்சாம் ' - என்ற அருமையான இனிமையான
வார்த்தையை எழுந்ததும் செய்தியாய் சொன்னான் நண்பன் .
நல்ல சகுனம் என்றெண்ணியபடி ,
' என்னடா ஆப்பி நியூ இயர் வருது . இப்படி குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினா
எப்படி ' என்று ஆரம்பித்தேன்
' போ மச்சான் , ஏதோ செலவு வைக்க முடிவு பண்ணிட்ட ! ' என்றபடி இழுத்து
போர்த்திக்கொண்டான் ஒருவன் .
' வழமை போல் ( இப்படி பேச அவரு புலவர் இல்ல , ஆங்கிலத்திலிருந்து
மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது ! ) கடற்கரையா ?? வேற வேலை இல்ல ' தேநீர் பருக
கிளம்பிவிட்டான் இன்னொருவன் .
' பொழப்ப பாக்கோணும் ' சொல்லியபடி குளியலறைக்குள் வேகமாக நுழைந்தான்
மற்றொருவன் .
' ம்ம்ம்ம் .......... மேல சொல்லு '
அந்த அருமையான வார்த்தையை கேட்டு .
நம்ப கருத்தையும் ஆர்வமா கேட்கும் அந்த சீவனை குரல் வந்த திசையில் தேடினேன்
' இங்க சமிஞ்ஞை சரியா கிடைக்கல , மொட்டை மாடிக்கு வாரன்... தள்ரா ' என்றபடி
மாடிக்கு என்னை ஒதுக்கி எழும்பி போனான் இறுதியாய் இருந்த ஒருவன் .
க்க்க்க்க்க்க்கி கிக்கீ கிகிகீ...
எவனோ விசிலடிக்கிறான் என்று ஆசுவாசமாய் படுக்க போனவனை , ' ஏன்டா எவ்வளவு
நேரமாடா அவன் மணியழுத்துவான் ? வெங்காயம் தக்காளி வந்திருக்கான் கதவ தொர
! ' என்று மாடியிலிருந்த ' தொர ' கட்டளையிட்டுவிட்டு மீண்டும் மலையேறினார் .
' என்றா இவ்வளவு நேரம் திறக்க ? '
' வேலையா இருந்தேன் சொல்லு ! '
' உன் நல்ல நேரம் . அந்த கடற்கரை விடுதியில் அறை கிடைச்சிடுச்சு '
.
.
.
.
.
.
என்ன புள்ளியா இருக்குன்னு பாக்கறீங்களா ?! சில நொடிகள் மகிழ்ச்சியோ
அதிர்ச்சியோ தெரியவில்லை . ஒரே நிசப்தம் நிலவியது ( இருந்தது இரண்டே
பேருதான் என்பது வேற விடயம் ! )
நான் சொன்னா நம்ப மாட்டானுங்க நீயே சொல்லிடு என்றேன் .
' எங்க இருக்கு பெருசு ? '
மாடியில செல்பேசி ஆராய்ச்சியில் இருக்கான் . இங்கிருந்தே சொல்லு , கிட்ட போனா
கடுப்பாயிடுவான்
' டேய் செம்மறியாட்டு மண்டையா ! விடுதியில் அறை கெடச்சிடுச்சு . ஈருந்தா இல்ல
பேருந்து முன்பதிவு செய்யவா ?!?! '
மச்சான் ! பரீட்சையில் நாம எல்லாரும் தேர்ச்சி ன்னு சொல்லியிருந்தா கூட இப்படி
ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்காது !!
போர்வை போர்த்தியிருந்த உடலுக்கு சட்டென்று உயிர் வந்தது . ஆச்சரியம் கலந்த
விழிகளுடன் அருகில் வந்து நின்றது .
குளியலறையின் கதவு சட்டென்று திறந்துக் கொண்டது . சித்தர் பாதி , புத்தர் பாதி
கணக்காய் மகிழ்ச்சியுடன் இன்னொருவன் .
கையால் இறங்கி வந்தா கூட இவ்வளவு வேகமா வந்திருக்க முடியாது . ' பெருசு '
வாம்மா மின்னலு கணக்காய் வந்துவிட்டது .
தேநீர் குடிக்க போனவனுக்கு சிறப்பு செய்தி போயிருக்க வேண்டும் . அழைப்பு
வந்திருந்தது .
' என்னடா சொல்ற ?! '
' ஆமா மச்சான் காலையில தான் செய்தி வந்தது செல்பேசிக்கு '
' காசுதான் கொடுக்கலியே அப்புறம் எப்படி ? ' சந்தேகக் கண்ணோடு கேள்வி
துவங்கியது
' நம்பளையும் மதிச்சு கூப்பிடறாங்க இல்ல , போவணுமா இல்லையா ?! ' கொதித்தான்
செய்தியுடன் வந்தவன் .
' சரிடா சொக்கா !அங்க வசதியெல்லாம் ? '
' எல்லாம் தயாரா இருக்கு முதல்ல கெளம்பு ! '
' அப்போ சரி பொட்டிய கட்டறோம் , ஊர்ல போய் குதிக்கறோம் '
' அதுக்கு முன்னாடி அலுவலகத்துல விடுமுறை சொல்லியாச்சா ? '
' அது கெடக்கு கழுத . என்றா பசுபதி கட்ரா வண்டிய ! '
அதற்கு பிறகு என் பேச்சுக்கு பதில் வருமென நான் காத்திருப்பது வீண் என
தோன்றியது .
இறுதியாய் ஒரு கேள்வி ,
' எல்லாம் சரி , எப்படி போறது ? '
' வானந்தான் வா வா ன்னு சொல்லுதுல , ஈருந்துதான் ! '
தங்களுக்குரிய வாகனத்தை முடிவு செய்து கொண்டார்கள் .
பெட்டிகள் கட்டப்பட்டன , துணிகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன .
வாசனைத்திரவிய குப்பிகளும் , செல்பேசி மின் திறன் வழங்கியும் இடத்தை
தக்கவைத்துக் கொண்டன .
அவனவன் ' புயல் ' வேகத்தில் கிளம்பினான்
அவரவர் ஈருந்தை கிளப்பினோம் .
<photo id="1" />
அதென்னமோ தெரியவில்லை , பெருசுவின் வாகனம் அன்று அப்படி அடம்பிடித்தது .
' சரிடா ! நான் பேருந்துல வந்திடறேன் . ஒண்ணும் பிரச்சினையில்ல . அங்க போயி
அச்சுவோட வண்டிய எடுத்துக்கறேன் '
அனைவரும் ஆமோத்திவிட்டு எங்க பாட்டுக்கு கிளம்பி விட்டோம் .
பெருசும் , இரவியும் பேருந்தில் ...
அப்ப கூட எங்க ஆறாம் அறிவுக்கு புரியல .
வழியில் ஒருத்தன் சொன்னான் ' மச்சான் இப்படித்தான் ஒரு மன்னர் போருக்கு
கிளம்பும்போது குதிரை முரண்டு புடிச்சதாம் . அந்த போர்ல மன்னர் இறந்துட்டாராம் ...
'
முதல்ல வண்டியிலிருந்து கீழ இறங்கு ,
கதை சொன்னவனை அனைவரும் மொத்தி எடுத்தோம் ... ' படுவா , ஊருக்கு வர வரை
வாயே தொறக்க கூடாது ! '
' பரீட்சை பார்க்கர்ல தான் எழுதுன . அப்படியே எல்லாத்திலேயும் முதல் நிலை
வாங்கிட்டாரு . அம்பது பைசா ஊற்றேழுதியில பரீட்சை எழுதி பாசான நாயெல்லாம்
பேசுது ' கவுண்டர் முறையில் அவனை கவனித்து விட்டு மறுபடியும் கிளம்பினோம் ...
புதுச்சேரி சில நூறு கி.மீ . என வரவேற்றது ஒரு பதாகை
பின்னணியில் ' வாங்க பசங்களா மாட்னீங்களா ' என்பதை வாய்க்குள் மறைத்து ,
புன்சிரிப்புடன் எங்களை பார்த்துக்கொண்டிருந்தது சூரியன் . . .
தொடரும் ...
( அருஞ்சொற்பொருள் : ஈருந்து - மோட்டார் சைக்கிள் , பேருந்து - பஸ் , சமிஞ்ஞை - சிக்னல் , எழுதுகோல் - பேனா )
இயல்பு தமிழில் அதுவும்
ReplyDeleteசுத்த தமிழில்
நல்ல அனுபவப்பகிர்வு.,
சிரித்த சூரியன் -அர்த்தம் என்ன?
ReplyDeleteவெயிட்டிங்:-)