Oct 12, 2011

இவர்களைப் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க...



இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்...

  
இடமிருந்து வலம் : க. வீரப்பன்  நா . மாரிச்சாமி , ச. ஆறுமுகம் சி . நாகராஜ் . 
இவர்களை பற்றி சில விடயங்களை பகிர நான் கடமை பட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் அண்மையில் கோயம்பேட்டில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது நமக்கு தெரிந்தாலும் தெரியாத சில விடயங்களும் உண்டு . அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள் இவர்கள்? என்ன சிறப்பு இவர்களிடம் இருக்கிறது ? இவர்கள் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் என்பதை தவிர இவர்களை பற்றி சிறப்பாக கூற என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இவர்களை பற்றி சொல்ல மறந்த கதை ஒன்றும் இருக்கிறது .



2008 பிப்ரவரி மாதம் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலம் . தமிழகத்தில் பல்வேறு இடத்தில் தமிழ் உணர்வாளர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர் . சிலர் என்ன செய்வது, எப்படி போரை நிறுத்துவது என திகைத்து நின்றனர். அப்போது ஒரு செய்தி தமிழ் உணர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. யாரோ ஐந்து பேர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியே கன்னியாகுமரியை நோக்கி போரை நிறுத்த வேண்டும் என்று பதாதை ஏந்தி நடை பயணம் மேற்கொண்டுள்ளனர் என்ற செய்தி உணர்வாளர்களை சற்று உற்சாகப் படுத்தியது. அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள சிலர் ஆயத்தமாகினர். அந்த குழு விழுப்புரம் வரை சென்ற போது பழ நெடுமாறன் அய்யா அவர்களை வரவேற்றார் . அவர்களை வரவேற்க பல உணர்வாளர்களும் திரண்டனர் . அவர்களை சந்தித்த உணவாளர்கள் சற்றே அதிர்ச்சிக் குள்ளாயினர் , காரணம் நடை பயணம் மேற்கொண்ட ஐவரும் பார்வையற்றோர் . க. வீரப்பன் . நா . மாரிச்சாமி , ச . ஆறுமுகம் சி . நாகராஜ் இவர்களோடு சக்திவேல் என்னும் மற்றொருவரும் சேர்ந்து சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு வந்திருந்தனர். இவர்கள் அடைய வேண்டிய இறுதி இலக்கு கன்னியாகுமரியில் உள்ள ஒண்சுடர் தூண்.


இவர்கள் பயணம் நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது . பார்வை உள்ளவர்களே பாதுகாப்பாக நெடுஞ்சாலையில் பயணம் செய்வது கடினம் . அவ்வளவு வேகமாக வாகனங்கள் போகும். இவர்களோ பார்வை இல்லாமல் ஒருவர் பின் ஒருவாராக அணிவகுத்து அடிமேல் அடிவைத்து நகர்ந்தனர். பிப்ரவரி 28 தொடங்கிய பயணம் இறுதியில் மார்ச் மாதம் 28 ஆம் தேதி ஒண்சுடர் தூணில் நிறைவு பெற்றது . பயணத்தின் முடிவில் இவர்கள் அனைவரின் கால்களும் வீங்கி ரணமாகி இருந்தது . இப்படிப் பட்ட அறிய சாதனையை நிகழ்த்திய இவர்களை பற்றி பெரிதாக எந்த ஊடகமும் கவலை படவில்லை . ஆட்சியாளர்கள் அப்படி.

இவர்களிடம் நான் கேட்ட கேள்வி . ஏன் இப்படி உங்கள் சொற்ப வருமானத்தையும் துறந்து போராட்டங்களில் கலந்து கொள்கிறீர் ? அவர்கள் சொன்ன பதில் நம்மை சிந்திக்க வைத்தது . எங்கள் படங்கள் தொலைகாட்சிகளில் காட்டுவார்கள், ஆனால் அதை எங்களால் பார்க்க முடியாது . அதனால் எங்கள் படங்கள் ஊடகங்களில் வருவதால் எங்களுக்கு பயன் இல்லை. நாங்கள் அதை விரும்பவும் இல்லை. நாங்கள் சொல்ல விரும்புவது , எங்களை போன்ற பார்வையற்றோரை பார்த்தாவது பார்வை உள்ளவர்கள் இனத்திற்காக போராட வரவேண்டும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழர்களின் உரிமைக்காக நீங்கள் எந்த போராட்டம் நடத்தினாலும் நாங்களும் உங்களுடன் சேர்ந்து போராட அணியமாக இருக்கிறோம் என்று சொன்னதும் ஒரு கணம் என் கண்களின் ஓரம் கண்ணீர் வந்தது.








நன்றிகள் :  தோழர் . ராஜ்குமார் பழனிச்சாமி  மற்றும்  விவேக்  )

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.